Site icon Bethel Tamil Christian Church Switzerland

உயிரோடே பாதுகாத்தார்

கர்த்தர் அவனைப் பாதுகாத்து அவனை உயிரோடே வைப்பார்    சங்கீதம்-41:2

பள்ளிப் பருவம் பயமறியா வயது. பாடசாலை மாணவர்களோடு விளையாடுவதுமாக மகிழ்ச்சியாகக் காலத்தைக் கழித்த எனக்கு, ஒரு நாள் என் வாழ்வில் நான் மறக்க முடியாத நாளாக அமைந்தது. அப்படி என்ன நடந்தது என்று நீங்கள் கேட்க வாஞ்சையாக இருக்கிறீர்களா?

நான் சொல்கிறேன் கேளுங்கள். அந்த நாளில் அண்டை வீட்டு நண்பர்களுடன் மீன் பிடிக்கச் சென்றேன். என்னோடு என் சகோதரனும், மாமா மார் இருவரும் சேர்ந்தே வந்தார்கள். எல்லோருமாகச் சேர்ந்து தீவிரமாக மீன் பிடிக்க முயன்றோம். ஒரு மீன் கூட அகப்படவில்லை. பேதுரு தாத்தாவின் பரிதாபமான நிலைதான் எங்கள் நிலையும்! சரி என்ன செய்வோம் என்று நினைத்து வீட்டை நோக்கி நகர முற்பட்டபோது, சற்று நீந்துவோம் என்று சில நண்பர்கள் தண்ணீரை நோக்கி நடக்க, நானும் நடந்தேன். விநோதம் என்னவென்றால், ஒருவருக்கும் நீந்தத் தெரியாது. இள ரத்தம் பயமறியாது என்பது போலச் சவாலுக்குச் சற்று நீந்திச் சென்றேன். எனக்குள் ஒரு கூதுகலம். சரி போதும் திரும்பி கரைக்கு போவோம் என்று திரும்பினால், தொடர்ந்து நீந்த முடியாதவனாக அமிழ்ந்து போக ஆரம்பித்தேன். கரையிலிருந்தவர்கள் கன்னத்தில் கவலையோடு கைகளை வைத்தபடி நிற்க, பேதுரு தாத்தா போலக் கதற ஆரம்பித்தேன். என் சகோதரன் நீந்தி வந்து என்னைக் காப்பாற்றினார். இது தேவனுடைய செயலே.

ஆம், உங்கள் வாழ்விலும் இப்படி எத்தனையோ சம்பவங்கள் நடந்திருக்கும் என்பதை அறிவேன். நம்மையும் குடும்பத்தையும் பிள்ளைகளையும் இம்மட்டும் காத்துவந்த தயவுக்காக, எல்லோரும் சேர்ந்து தேவனுக்கு நன்றி என்று சொல்வோமாக.  ஆமென்

உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!



பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 16.30 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்

www.betheltamilchurch.com/worship-live/


Exit mobile version