Site icon Bethel Tamil Christian Church Switzerland

சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுக்கிறார்

சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்.    ஏசாயா-40:29

சில நேரங்களில், சிறுவர்கள் தொடங்கி பெரியோர் மட்டும் ஏதோ ஒரு காரணத்திற்காக சோர்ந்து போவதுண்டு. பெரிய தீர்க்கதரிசியாகிய எலியா வானத்திலிருந்து அக்கினியை இறக்கிய மனிதன். மழைபெய்யாதபடி வானத்தை அடைத்த மனிதன். மறுபடியும் மழை பெய்யும்படி ஜெபித்த போது மழைபெய்தது. அந்த தீர்க்கதரிசி சோர்ந்து போய், ஆண்டவரே நான் சாகவேண்டும் என்று விண்ணப்பம் பண்ணினான். காரணம் யேசபேலின் பட்டயத்தைக் கண்டு பயந்து சோர்ந்து போனான்.

1994 ஆம் ஆண்டு நான் வீடு தேடி எல்லா இடங்களுக்கும் விண்ணப்பம் பண்ணினேன். ஆனால் விண்ணப்பங்கள் எல்லாம் இல்லை என்ற பதிலோடு திரும்பிவந்தபோது, மிகவும் சோர்ந்து போனேன். ஒரு நாள் வேதத்தை எடுத்து வாசித்துவிட்டு, இது எனக்குத் தெரிந்த பகுதிதானே என்று வேதத்தை மடித்து வைத்துவிட்டு நித்திரைக்குச் சென்றேன். இரவு ஆண்டவர் நான் வாசித்த வேதபகுதியில் இருந்து என்னோடு பேசினார். “மகனே சீடர்கள் எனக்கு தலையணை கொடுத்து, என்னை அவர்களுக்கு பின்னாக நித்திரை செய்ய வைத்துவிட்டுப் போனார்களே. இன்று உன் படகில் என்னை எங்கே வைத்திருக்கிறாய்?” என்றபோது மனம் கசந்து அழுது தேவனோடு ஒப்புரவானேன். அந்த இரவு 2 மணிக்கு, சோர்ந்து போன எனக்கு அவர் பெலன் கொடுத்தார். சமாதானம் என் உள்ளத்தை நிரப்பினது. அதே கிழமையில் எனக்கு பழக்கமில்லாத ஒரு நபர் மூலமாக ஒரு வீடு கிடைத்தது.

நம்முடைய ஆண்டவரின் அன்பை பாருங்கள். நீங்கள் துக்கத்தோடே அல்ல, சமாதானத்தோடே இருக்க வேண்டும் என்பதே தேவனுடைய திட்டம். கலங்க வேண்டாம்! இன்று சோர்ந்து போனீர்களோ? கவலை வேண்டாம்! நம் இயேசு கைவிடமாட்டார்.  ஆமென்


உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!



பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்

www.betheltamilchurch.com/worship-live/


Exit mobile version