Site icon Bethel Tamil Christian Church Switzerland

இன்று அதிசயமான காரியங்களை காண்பீர்கள்

அதினாலே எல்லாரும் ஆச்சரியப்பட்டு, தேவனை மகிமைப்படுத்தினார்கள்; அல்லாமலும், அவர்கள் பயம் நிறைந்தவர்களாகி, அதிசயமான காரியங்களை இன்று கண்டோம் என்றார்கள்.    லூக்கா-5:26

இந்த நாள் உங்கள் வாழ்வின் வெற்றியின் நாள். இந்த வார்த்தையை இன்று காலை முழு மனதோடு விசுவாசிப்பீர்களானால், ஆமென் என்று சொல்லி சிறிய ஜெபம் செய்துவிட்டுத் தொடர்ந்து வாசியுங்கள். அதுமட்டுமல்ல நீங்கள் இன்று விசுவாச ஜெபத்தின் மூலம் பெற்ற ஆசீர்வாதத்தை மறவாமல் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

1992 ஆண்டு எனது காலில் ஒரு ஆணிக்கூடு (கால் ஆணி) காணப்பட்டது. நான் வைத்தியரிடம் சென்று ஆலோசித்த போது, அந்த ஆணிக்கூட்டை சத்திர சிகிச்சை (அறுவை சிகிச்சை) மூலமாக அகற்றி விடலாம் என்று கூறினார். நான் அதற்குத் தயார் என்று கூறிவிட்டு, எனது மேல் அதிகாரியைச் சந்தித்து எல்லாவற்றையும் விபரமாகக் கூறினேன். ஏற்கனவே நான் சவூதி அரேபியாவில் இருக்கும் போது, இது போன்ற ஒரு சத்திர சிகிச்சை செய்தேன். எனக்கு ஆறு மாதம் மருத்துவ விடுப்பு (விடுமுறை – medical leave) கொடுத்தார்கள். ஆனால் நான் மூன்றரை மாதத்திலேயே மறுபடியுமாக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டேன் என்று கூறியபோது, அப்படியானால் எப்பொழுது நீங்கள் சத்திர சிகிச்சை செய்யப் போகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு நான், சற்று பொறுங்கள், குளிர் கால ஆரம்பத்தில் செய்ய வாஞ்சிக்கிறேன் என்ற போது அவரும் சம்மதித்தார். நான் வருடத்தில் ஒரு முறை தேவ சமூகத்தில் ஒரு வாரம் உபவாசம் செய்து ஜெபிப்பது உண்டு. எனவே அதற்கான நாட்களை ஒதுக்கி, தேவ சமூகத்தில் உபவாசித்து ஜெபித்தேன். ஆனால் என்னுடைய சத்திர சிகிச்சைக்காகவோ அல்லது எனது தேவைக்காகவோ ஜெபிக்கவில்லை. உபவாச ஜெபம் முடிந்தது. வேலைக்குப் போகும்போது கால் வலி இல்லாமல் இருப்பதை உணர்ந்த போது, அந்த இடத்தைப் பார்த்த போது என் கண்களாலேயே நம்பமுடியாத அந்த அற்புதத்தை கண்டேன். ஆணிக்கூடு இருந்த இடத்தையே காணவில்லை.

இதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் வாழ்வில், குடும்ப வாழ்வில், பிள்ளைகள் வாழ்வில், நீங்கள் எதிர்பார்த்ததும் எதிர்பாராததுமான அதிசயமான காரியங்களை இயேசு செய்துவிட்டார். வியாதி நீங்கிவிட்டது! தேவை சந்திக்கப்பட்டுவிட்டது! சமாதானம் வந்துவிட்டது! துள்ளிக் குதித்து கர்த்தருக்கு நன்றி செலுத்துங்கள்.  ஆமென்


உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!



பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்

www.betheltamilchurch.com/worship-live/


Exit mobile version