Site icon Bethel Tamil Christian Church Switzerland

கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர்

கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர்  உபாகமம் 31:8

ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் சர்வத்தையும் படைத்த ஆண்டவர், நான் உனக்கு முன்னே போவேன் என்று வாக்குறுதி கொடுப்பது எத்தனை பெரிய ஆசீர்வாதம்! ஆண்டவர் முன்னே போகும் போது தடைகள் எல்லாம் உடைத்தெறியப்படும். இருப்பு தாழ்ப்பாள்களும் வெண்கல கதவுகளும் உடைத்தெறியப்படும். அதன் மூலமாகச் சுதந்தரிக்க முடியாமல் இருக்கும் ஆசீர்வாதங்களைச் சுதந்தரித்துக் கொள்ள முடியும். இதைச் செய்கிறவர் நம்முடைய கர்த்தர்.

இன்று அநேகர் கர்த்தரை முன்னே அனுப்பாமல், தாங்கள் முன்னே போய் காரியங்களைச் சாதிக்க முடியும் என்று போய் நிர்க்கதியாய் இருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? கிட்டத்தட்ட இருபது லட்சம் ஜனங்களை ஆண்டவருடைய வார்த்தையின்படி நடத்திக் கொண்டுவந்த மோசேயைப் பாருங்கள். அவன் ஆண்டவரைப்பார்த்து, “ஆண்டவரே உம்முடைய சமூகம் எனக்கு முன் போகட்டும். இல்லாவிட்டால் நான் இவ்விடத்திலேயே இருக்கிறேன்“ என்று சொல்வதை நாம் வாசிக்கிறோம். காரணமென்ன? ஆண்டவர் முன்னால் போனால், எல்லாம் வெற்றி என்பதை மோசே அறிந்திருந்தார். யோர்தான் நதி பிரவாகித்து ஓடிக்கொண்டிருக்கும்போது, கர்த்தருடைய பெட்டி முன்னாலே ஆசாரியர்களால் சுமந்து செல்லப்பட்டது. நடந்தது என்ன? ஆறு இரண்டாகப் பிரிந்தது.

ஆம் பிரியமானவர்களே, நீங்கள் சுதந்தரிக்க வேண்டிய ஆசீர்வாதங்களைச் சுதந்தரித்துக் கொள்ள முடியாமல், தடையாக இருக்கிற எந்த ஒரு காரியமானாலும், அவற்றை தகர்த்துப் போட்டு வெற்றியை உங்கள் வாழ்வில் கொண்டுவர, இன்று இயேசுவை உங்கள் முன் போக அனுமதியுங்கள். ஆசீர்வாதத்தை சுதந்தரித்து கொள்ளுங்கள்.  ஆமென்


உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!



பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்

www.betheltamilchurch.com/worship-live/


Exit mobile version