Site icon Bethel Tamil Christian Church Switzerland

திக்கற்றவர்களை அலட்சியம் பண்ணாதவர்

திக்கற்றவர்களுடைய ஜெபத்தை அலட்சியம்பண்ணாமல், அவர்கள் விண்ணப்பத்தை அங்கீகரிப்பார்.  சங்கீதம்-102:16

பணம் படைத்தவர் முன் ஏழை அலட்சியம் பண்ணப்படுகிறான். படித்தவன் முன் பேதை அலட்சியம் பண்ணப்படுகிறான். அழகானவர் முன் அழகற்றவன் அலட்சியம் பண்ணப்படுகிறான். இப்படி மனிதர்கள் மனிதர்களை அலட்சியம் பண்ணுகிறார்கள். ஆனால் எவரையும் அலட்சியம் பண்ணாதவர் நமது தேவன். அவர் அவர்களுக்குச் செவி கொடுக்கிறார்.

ஒரு பட்டணத்தில் ஒரு நியாயாதிபதி இருந்தான். அந்தப் பட்டணத்தில் ஒரு விதவைத் தாயும் இருந்தாள். அவள் தனக்கிருந்த வழக்கை விசாரிக்கும் படி அந்த நியாயாதிபதியை எத்தனையோ முறை தொந்தரவு செய்தாள் . ஆனால் அவனோ இரக்கமற்றவனாக இருந்து, அந்தத் தாயின் தொல்லை தாங்க முடியாமல் அவள் வழக்கை விசாரித்தான் என்று நாம் லூக்கா 18 ஆம் அதிகாரத்தில் வாசிக்கிறோம்.

ஆம் பிரியமானவர்களே! இந்த அநீதியுள்ள நியாயாதிபதி அவளுக்கு நியாயம் விசாரித்திருப்பானேயானால், நமது பரமபிதா எவ்வளவு அன்பும் இரக்கமுள்ளவராக நமது காரியங்களை விசாரிப்பார். இவ்வளவு நாளும் என் ஜெபம் கேட்கப்படவில்லை, எனக்குப் பதில் கிடைக்கவில்லை என்று கலங்காதேயுங்கள். தேவன் உங்கள் மீது அக்கறையுடன் இருக்கிறார், உங்களுடைய குரலைக் கேட்க விரும்புகிறார். ஒவ்வொரு நாளும் தேவனிடம் பேசுங்கள். இயேசு சொன்னதை உங்கள் நினைவிற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ? லூக்கா-18:7

விசுவாசியுங்கள், தொடர்ந்து சுகம் கிடைத்து விட்டது, தேவை சந்திக்கப்பட்டுவிட்டது, என்று விசுவாசித்து அவரை மகிமைப்படுத்துங்கள். வருகிற நாட்களில் நடக்கும் அற்புதங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.  ஆமென்.


உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!



பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்

www.betheltamilchurch.com/worship-live/


Exit mobile version