Site icon Bethel Tamil Christian Church Switzerland

போஷிக்கும் தேவன்

அவர் அவர்களை நோக்கி: நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார் மாற்கு-6:37

அருமையான தேவ பிள்ளையே! எத்தனையோ தகப்பன்மார் தங்கள் பிள்ளைகள் ஆகாரம் புசித்தார்களா? மனைவி ஆகாரம் புசித்தாளா? என்று கேட்க கூட மாட்டார்கள். ஆனால், தான் குடிப்பதும் நண்பர்களோடு சந்தோஷமாக இருப்பதும், வீட்டு செலவிற்குப் பணம் கொடாவிட்டாலும் சாப்பாடு போடு என்று சண்டை தகராறு பண்ணி ஆகாரம் புசிப்பதும் போன்ற அநேக காரியங்களைக் கேள்வி படுகிறோம்.

ஆனால் நம்முடைய ஆண்டவருடைய அன்பைப் பாருங்கள்! தன்னிடத்தில் வசனம் கேட்க வந்தவர்கள் பசியாக இருப்பார்கள்; அவர்களுக்கு ஆகாரம் கொடாமல் அனுப்பி விட்டால், போகும் வழியிலே மயங்கிவிடுவார்கள் என்று அறிந்த இயேசு அவர்களுக்கு ஆகாரம் கொடுத்தனுப்புகிறார். இது அவருடைய அன்பையும் பராமரிப்பையும் தெரிவிக்கிறதல்லவா!
யோபு-38:41 ஐ வாசித்துப்பாருங்கள்.

காக்கைக்குஞ்சுகள் தேவனை நோக்கிக் கூப்பிட்டு, ஆகாரமில்லாமல் பறந்து அலைகிறபோது, அவைகளுக்கு இரையைச் சவதரித்துக் கொடுக்கிறவர் யார்?

பாருங்கள்! தம்முடைய சிருஷ்டிப்பில் ஒன்றையும் மறவாத தேவன், உங்களை மறப்பாரோ? நிச்சயமாக இல்லை! இதுவரை நம்மைப் போஷித்தார். இனிமேலும் போஷிப்பார். ஆமென்.


தேவன் தன்னுடைய படைப்புகளின் மூலம் என்னென்ன வழிகளில் உன்னை போஷிக்கின்றார்? இதற்காக அவருக்கு எப்படி நன்றி சொல்லப் போகின்றாய்?


உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!



பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்

www.betheltamilchurch.com/worship-live/


Exit mobile version